சனி, செப்டம்பர் 17, 2011

மத கலவர தடுப்புச்சட்டம் சிறுபான்மையினருக்கு ஆதரவானது! ஆர்.எஸ்.எஸ் கண்டனம்

கடலூர்: மத்திய அரசு அமல் படுத்த உள்ள மதக் கலவர தடுப்புச் சட்டம் இந்து சமுதாயத்திற்கு எதிராக உள்ளது என ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆர்.எஸ்.எஸ்  தென்னிந்திய தலைவர் வன்னியராஜன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது: மத்திய அரசு, மதக்கலவர தடுப்புச் சட்டம் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இச்சட்டம் இந்து சமுதாயத்திற்கு எதிராகவும், சிறுபான்மைப் பிரிவு மக்களுக்கு ஆதரவாகவும் உள்ளது. ஒட்டுமொத்த சட்ட வரைவு, இந்து சமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தினரும் பிற மதத்தினருடன் பகைமையைத் தூண்டும் விதமாக இந்த சட்ட வரைவு உள்ளது. மத்திய அரசு, சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக சட்ட வரைவு செய்துள்ளது. இதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது; சட்டமாக்கக் கூடாது. சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் சட்ட வரைவுக்கு கண்டனம் தெரிவிக்கிறது. கடலூர் மாவட்டத்தில், இந்து சமுதாய ஆன்மிக பெரியோர்கள் கொண்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.
இந்து ஆலய பாதுகாப்புக் குழு 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தின் போது இந்து கோவில்களில் செல்வம் நிறைந்தவைகளாக இருந்ததால், இந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் வைத்து பிரிட்டிஷார் கொள்ளையடித்தனர். அந்த சட்டத்தின்படியே இந்து கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன.
கிறிஸ்தவ ஆலயம், பள்ளி வாசல், தர்காக்கள் அந்தந்த மத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால், இந்து கோவில்கள் மட்டும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. ஆன்மிக பக்தி இல்லாதவர்களிடம் அறங்காவலர் பொறுப்பு வழங்கப்பட்டு வருவதால், கோவில் நிர்வாகத்தில் சீர்கேடு ஏற்படுகிறது.
அரசு கோவில் நிர்வாகத்தை இந்து சமுதாயத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து, தமிழக முதல்வரிடம் சட்டம் இயற்றிடக் கோருவோம். என்று வன்னியராஜன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக