செவ்வாய், பிப்ரவரி 25, 2014

பேப்பர் சோதனை மூலம் கேன்சரை எளிதில் கண்டறியலாம்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை


வளரும் நாடுகளில் கேன்சர் நோயின் சதவிகிதம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் உலகளாவிய கேன்சர் நோயாளிகளின் இறப்பும் 70 சதவிகிதமாக அதிகரித்துள்ளது இந்நோயின் பெரும் தாக்கத்தையே குறிப்பதாக உள்ளது. 


ஆராம்பகாலத்தில் கண்டறியப்படும்போது இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்றபோதிலும், குறைந்த அளவிலான மருத்துவ கட்டமைப்பு கொண்ட பல நாடுகளிலும் இதற்கான 'மாமோகிராம்' போன்ற சோதனைமுறைகள் மிகுந்த பொருட்செலவைக் கொடுப்பதாக இருக்கின்றன.

இந்தநிலையில், தொழில்நுட்பத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக எளியமுறை பேப்பர் சோதனை ஒன்றின்மூலம் கேன்சர் நோயைக் கண்டறியும் வழிமுறையை இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ளார். கர்ப்ப சோதனை செய்வதுபோல் ஒருவரின் சிறுநீரைக் கொண்டு நிமிட நேரங்களில் கேன்சர் நோயைக் கண்டறியமுடியும் என்பது இவரது சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியினரான சங்கீதா பட்டியாவே இந்தப் பெருமைக்கு உரியவர். எம்ஐடி பேராசிரியரும், ஹோவர்ட் ஹியூக்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ஆய்வாளருமான இவர் ஏற்கனவே அமெரிக்க விஞ்ஞான ஆய்வுகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த எளிய சோதனைமுறை கண்டறியப்பட்டபோது அதனை பகுப்பாய்வு செய்ய மிகவும் சிறந்த கருவிகளைப் பயன்படுத்தியதாக சங்கீதா குறிப்பிட்டார். மேலும் வளரும் நாடுகளில் இந்த எளிய சோதனைமுறையை எந்தவித சிறப்பு உபகரணங்களும் இல்லாமல் பயன்படுத்தமுடியும் என்றும் ஒரு மொபைல்போனில் எடுக்கப்படும் படம் மூலமாகக்கூட சோதனைக்கூடத்தின் பராமரிப்பாளர் இந்தத் தகவலைத் தெரிவிக்கமுடியும் என்பதுவும் இந்த சோதனைமுறையின் சிறப்பம்சமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய்களைக் கண்டறிய இந்த எளியமுறை உதவுவதுடன் மட்டுமில்லாமல் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்படாத நோய்களுக்கும் இதே உத்தியைப் பயன்படுத்த முடியும் என்பதுவும் இந்த முறைக்கான மற்றொரு சிறப்பாகும் என்று ஆய்வுக்கூடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக