புதன், பிப்ரவரி 19, 2014

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு: தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது மத்திய அரசு...


இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க கோரி மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த இட ஒதுக்கீடானது 4.5 சதவீதமாகும்.

 அதாவது, கல்வி, வேலைவாய்ப்புகளில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து இந்த ஒதுக்கீடு திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. 

இதை நீக்கக் கோரி, கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மத்திய அரசின் சொலிசிட்ர் ஜெனரல் மோகன் பராசரன் ஒரு மனு செய்திருந்தார். ஆனால் அக்கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. 

அப்போது மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், 2010ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி ஆந்திர மாநில அரசு இதேபோன்ற இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்திருந்ததை சுட்டிக் காட்டியிருந்தது. 

இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக அவசர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி மோகன் பரசாரன், தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்சிடம் மனு செய்துள்ளார். 

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் நீண்ட காலப் பிரச்சினையாக நீடித்து வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்து இதை காங்கிரஸ் கொண்டு வந்ததாக அது குற்றம் சாட்டி வருகிறது. 

இது அரசியல் ஸ்டண்ட் என்றும் பாஜக வர்ணிக்கிறது. முதலில் இந்த இட ஒதுக்கீட்டை ஆந்திர மாநில காங்கிரஸ் அரசுதான் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. 

அதற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தேசிய அளவில் இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4.5 சதவீத இட ஒதுக்கீட்டை முன்வைத்தது. 

ஆனால் அதற்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அப்பீல் செய்தது. 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி இதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அன்று முதல் இஸ்லாமியர்களுக்கான மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

thanks: oneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக