புதன், ஏப்ரல் 18, 2012

திருமணப் பதிவுச் சட்டம்: முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு!


மத, இனப் பாகுபாடின்றி அனைத்துத்  திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எதிர்க்க உள்ளது.
முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் தலையிடுவதாக இந்தக் கட்டாயப் பதிவுச் சட்டம் அமைவதால் விரைவில் கூட உள்ள முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கூட்டத்தில் கடும் எதிர்ப்புக்குரல் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான ஜாஃபர்யப் ஜீலானி கூறுகையில், இந்தச் சட்டம் பரிசீலிக்கப்பட்ட நேரத்தில், அதாவது மூன்றாண்டுகளுக்கு முன்பே எங்கள் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவித்திருந்தோம் என்றார். "மெளலானா இப்ராஹிம் ரசூல் இல்யாஸி தலைமையிலான குழு மாநிலந்தோறும் ஆய்வு செய்து அப்போதைய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது"

சில குறிப்பிட்ட அரசு அமைப்புகளின் சேவைகளைப் பெறும் நோக்கில் திருமணங்களைப் பதிவு செய்வது ஏற்கத்தக்கது எனினும் அதைக் கட்டாயமாக்குவது மதச்சட்டங்களில் தலையிடுவதாகிவிடும் என்றார் ஜீலானி. ஜீலானி உ பி மாநிலத்தின் கூடுதல் தலைமைப் பொது வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிக்கத்தக்கது

ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர் கருதுகோளுக்கிணங்க, நான்கு குடிமையியல் அம்சங்களில்  அவரவர் மதச்சட்டங்களை மேற்கொள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. முஸ்லிம்களுக்கு அவ்வாறு அனுமதிக்கப்பட்டவற்றுள் திருமணம், விவாகரத்து, பாகப்பிரிவினை ஆகியன உள்ளடங்கும் என்பது அறியத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக