திங்கள், மார்ச் 12, 2012

சுரங்க அதிகாரிகளை தாக்கிய பா.ஜ., தலைவர் கைது

      மோரினா :மத்திய பிரதேசத்தில், சுரங்கத்திலிருந்து அனுமதியின்றி கற்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை தாக்கிய, பா.ஜ., மாவட்ட தலைவர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம், மோரினா மாவட்டம், பான்மோர் நகரில், சட்ட விரோதமாக கற்களை ஏற்றிச் சென்ற டிராக்டரை தடுத்த போலீஸ் அதிகாரி நரேந்திரகுமார் சிங், கடந்த வாரம் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டார்.
 இதைத் தொடர்ந்து, சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, மாநில அரசு உத்தரவிட்டது.கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி, சுரங்கத்திலிருந்து சட்ட விரோதமாக கற்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்த சுரங்க ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் மாவட்ட சுரங்க அதிகாரி ராகேஷ் கனிரியா ஆகியோரை, மோரினா மாவட்ட பா.ஜ., துணை தலைவர் அமீர்சிங் தாக்கினார். அதுமட்டுமல்லாது, பறிமுதல் செய்த வாகனங்களை, வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, அமீர்சிங் நேற்று கைது செய்யப்பட்டார்.இதே போல, அஜய்கார் பகுதியில், சுரங்க வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை நோக்கி, நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்திய குபேர்சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி., மாநிலத்துக்கு சுரங்கப் பொருட்களை கடத்த உதவியாக, தற்காலிகப் பாலம் அமைத்திருந்ததையும், போலீசார் நேற்று அகற்றினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக