இந்நிலையில், ஸ்வீடனில் அவர் மீது பாலியல் பலாத்காரம், செக்ஸ் முறைகேடு புகார்களும் சுமத்தப்பட்டன. இங்கிலாந்தில் அசாஞ்ச் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்தில் இருந்து அவரை நாடுகடத்துமாறு ஸ்வீடன் போலீசார் கூறிவருகின்றனர். இதை எதிர்த்து அசாஞ்ச் வழக்கு தொடர்ந்துள்ளார். ரகசிய தகவல்கள் வெளியிடுவதை சிறிது காலம் நிறுத்தியிருந்த விக்கிலீக்ஸ் தற்போது அமெரிக்காவின் ‘ஸ்டிராட்ஃபோர்’ உளவு நிறுவனத்தின் 50 லட்சம் இமெயில்களை வெளியிட்டு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச உளவு நிறுவனம் ‘ஸ்டிராட்ஃபோர்’. பிரபல நிறுவனங்கள், விஐபிக்கள் பற்றிய தகவல்களை உளவு பார்த்து அரசு மற்றும் பிற அமைப்புகளுக்கு கான்ட்ராக்ட் அடிப்படையில் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இமெயில்களைத்தான் விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இவை 2004-ம் ஆண்டு ஜூலை முதல் கடந்த டிசம்பர் வரை பரிமாறப்பட்ட இமெயில்கள். ஸ்டிராட்ஃபோர் நிறுவனம் யார் யார் மூலம் ரகசிய தகவல்களை திரட்டுகிறது, இதற்காக அவர்களுக்கு தரப்படும் சம்பள விவரம், தகவல் சேகரிக்க ஸ்டிராட்ஃபோர் பயன்படுத்தும் வழிகள் ஆகியவை இதன்மூலம் அம்பலமாகியுள்ளன.
போபால் விஷவாயு கசிவு சம்பவம் நடந்த யூனியன் கார்பைடு கம்பெனியின் துணை நிறுவனமான டவ் கெமிக்கல் கம்பெனி மற்றும் அரசு உளவு ஏஜென்சிகள், அமெரிக்க உள்துறை அமைச்சகம், அமெரிக்க கடற்படை உள்பட பல்வேறு அமைப்புகளுக்கும் ஸ்டிராட்ஃபோருக்கும் உள்ள தொடர்பு பற்றிய தகவல்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக