திங்கள், ஆகஸ்ட் 17, 2015

54 பேருடன் மாயமான இந்தோனேஷிய விமானம் மலையில் மோதி நொறுங்கியது

இந்தோனேஷியாவில் 54 பேருடன் சென்ற விமானம் திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தை தேடும் பணி மிகத் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவின் ஜெயபுரா நகரில் உள்ள சென்தானி விமான நிலையத்தில் இருந்து பப்புவா மாகாணத்தில் உள்ள ஒக்சிபில் நகருக்கு இன்று  ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. திரிகானா விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.டி.ஆர். 42–300 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 49 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 54 பேர் பயணம் செய்தனர். 

பப்புவா பிராந்தியத்தில் அடர்ந்த வனப்பகுதிக்கு மேலே அந்த விமானம் பறந்து கொண்டிருந்த போது, அதனுடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் திடீரென்று மாயமானது. இதைத்தொடர்ந்து, இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவினர், காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

இந்நிலையில், இந்த விமானம் இந்தோனேஷியாவின் பப்புவாவில் ஒக்பேப் என்ற மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விழுந்ததாகவும் அதன் பாகங்களைக் கண்டெடுத்துள்ளதாகவும், அந்நாட்டு விமான போக்குவரத்து மந்திரி சுப்ரசெத்யோ தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களை அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். ஆனால் விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்தார்களா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக