சனி, பிப்ரவரி 07, 2015

இந்தியாவில் மத சகிப்பின்மையால் நடந்தவற்றை காந்தி கண்டிருந்தால் அதிர்ச்சி அடைந்து இருப்பார்

இந்தியாவில் மத சகிப்பின்மையால் நடந்த காரியங்களை காந்தி கண்டிருந்தால் அதிர்ச்சி அடைந்து இருப்பார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தனது இந்திய பயணத்தின்போது, கடந்த மாதம் 27-ந் தேதி டெல்லியில் ஸ்ரீகோட்டை கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “மதத்தின் வழியில் பிளவுபடாத வரையிலும் இந்தியாவின் வெற்றி தொடர்ந்து கொண்டிருக்கும். மதப்பற்றின் அடிப்படையிலோ, இன்ன பிற வழிகளிலோ நம்மை பிளவுபடுத்தும் எந்த முயற்சியையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும்” என குறிப்பிட்டார். 

மத்தியில் ஆளுகிற நரேந்திர மோடி அரசைத்தான் ஒபாமா, இப்படி சூசகமாக குறிப்பிட்டார் என்று சர்ச்சை எழுந்தது. 
இந்த நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டனினில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடந்த தேசிய பிரார்த்தனை காலை உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒபாமா பேசிய பேச்சும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேச்சின்போது அவர் கூறியதாவது:- 

வியக்கத்தக்கதும், அழகானதும், முழுமையாய் அற்புதமான பன்முகத்தன்மை கொண்டதுமான இந்தியாவில் இருந்து நானும், மிச்செல்லும் திரும்பி இருக்கிறோம். 

ஆனால் அங்கே கடந்த காலங்களில் பல வகையான மத நம்பிக்கை கொண்ட மக்களும், அவ்வப்போது, பிற மத நம்பிக்கை கொண்ட மக்களால் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அவர்களது பாரம்பரியமும், அவர்களது நம்பிக்கையும்தான். 

மத சகிப்பின்மையால் நடந்த காரியங்கள், அந்த நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட காந்திஜியை அதிர்ச்சி அடைய வைத்திருக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக