செவ்வாய், பிப்ரவரி 17, 2015

4 மாநிலங்களில் இடைத்தேர்தல் தொகுதியை தக்க வைத்த கட்சிகள்

 ஆந்திர மாநிலம் திருப்பதி சட்டப் பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டது. திருப்பதி உள்ளிட்ட சில மாநில சட்டப் பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த 13ம் தேதி நடந்தது. தேர்தல் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த இடைத் தேர்தல் முடிவுகள் விவரம்

ஆந்திரா: திருப்பதி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த தெலுங்கு தேசத்தின் எம். வெங்கடரமணா காலமானதைத் தொடர்ந்து இடைத் தேர்தல் நடந்தது. இதில் அக்கட்சியின் சார்பில் வெங்கடரமணாவின் மனைவி சுகுணா நிறுத்தப்பட்டார்.
எம்.எல்.ஏ.க்கள் உயிரிழக்கும்போது, அவருடைய குடும்பத்தார் இடைத் தேர்தலில் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவதில்லை என்பதை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கொள்கையாக கொண்டுள்ளது. அதன்படி, அக் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சுகுணா வென்றதன் மூலம் தொகுதியை தெலுங்கு தேசம் கட்சி தக்க வைத்துக் கொண்டது. அவரை எதிர்த்து போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஆர். ஸ்ரீதேவி டெபாசிட் இழந்தார்.

கோவா: கோவாவின் பனாஜி சட்டப் பேரவை தொகுதியை 6வது முறையாக தக்க வைத்துக் கொண்டது பாஜ. இத் தொகுதியின் உறுப்பினராகவும், மாநில முதல்வராகவும் இருந்த மனோகர் பாரிக்கர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரானார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜ சார்பில் நிறுத்தப்பட்ட சித்தார்த் குன்கோலிங்கர் 5,368 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு ஆதரவாக 9,989 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்திர புர்டாடோவுக்கு 4,621 வாக்குகளும் பதிவாயின. கடந்த 1994ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் நடைபெற்ற 5 தேர்தல்களில் மனோகர் பாரிக்கர் வென்றார்.

அருணாச்சல்: முன்னாள் முதல்வர் ஜர்போம் காம்ளின் மறைவைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசம் லிரோமோபா பேரவை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் வென்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டது காங்கிரஸ். அக் கட்சியின் சார் பில் நிறுத்தப்பட்ட நியாமர் கர்பாக் 3,808 வாக்குகள் பெற்று 119 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர் த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் பாய் காடியை வென்றார்.

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ண கஞ்ச் சட்டப் பேரவை தொகுதியில் இடைத் தேர்தல் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சத்யஜித் பிஸ்வாஸ் 37,033 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அவருக்கு ஆதரவாக 95,469 வாக்குகள் பதிவாயின. பாஜவின் மனபேந்திரா ராய் 58,436 வாக்குகளுடன் 2வது இடத்தைப் பிடித்தார். மார்க்சிஸ்ட் கட்சி 3வது இடத்துக்கும், காங்கிரஸ் 4வது இட த்துக்கும் தள்ளப்பட்டன. பான்காவுன் மக்களவைத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக மம்தாபாலா தாகூர் நிறுத்தப்பட்டார். அவர் மார்க்சிஸ்ட் வேட்பாளர் தேபேஷ் தாஸை 2,11,794 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக