வியாழன், பிப்ரவரி 26, 2015

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 150 பேர் பலி: 12 கிராமங்கள் அழிந்தன

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள பான்ஷீர் பகுதியில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இது மலை பிரதேசமாகும். நேற்று திடீரென பல இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் அழிந்தன. 
பனிச்சரிவுக்குள் சிக்கி 150–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100–க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதுவரை 95 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக மாகாண கவர்னர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். 

பனிச்சரிவினால் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. இந்த பகுதியில் தகவல் தொடர்பு வசதி எதுவும் இல்லை. பனிச்சரிவு அதிகமாக இருப்பதால் பல இடங்களுக்கு மீட்பு குழுவினர் செல்ல முடியவில்லை. இதனால் பாதிப்பு குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சுமார் 1000 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக மாகாண அரசு கூறியிருக்கிறது. 

2010–ம் ஆண்டு இதே பகுதியில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது 165 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக