புதன், அக்டோபர் 19, 2011

ஆர்.எஸ்.எஸ் தனது கிளைகளை ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்களில் விரிவாக்க திட்டம்

மும்பை:ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்யின் தேசிய செயற்குழு கோரக்பூரில் கூடியது. அக்கூட்டத்தில் பேசிய சங்க பரிவார தலைவர் மோகன் பகவத் தற்போது உலகில் உள்ள நவீன தொழிற்நுட்ப சவால்களை சந்திக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் புதிய வழிமுறைகளை மேற்கொள்ளாதது குறித்து தாம் கவலை தெரிவிப்பதாகவும் மேலும் சங்க பரிவார அமைப்புகளை தற்போதைய தொழிற்நுட்பத்திற்கு ஏத்த வகையில் உருவாக்க வேண்டும் என்பதில் தாம் ஆர்வமாக உள்ளதாகவும் கூறினார். எனவே ஆர்.எஸ்.எஸ்ஸை தொழிற்நுட்ப ரீதியில் முன்னேற்றும் பொறுப்பை தங்களின் கிளை அமைப்பான சேவா பாரதியிடம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் அதனுடைய வளர்ச்சி மற்றும் செயல் திட்டங்களை குறித்து கோரக்பூரில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டாதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பெரு நகரங்களில் தங்களுடைய அமைப்பை வேரூன்ற செய்வதற்காக முக்கிய நகரங்களுக்காக தனித்தனியே இணையத்தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் நகரங்களிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களுக்கும் விரைவில் இணையதளங்களை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்கள் மத்தியில் தன்னுடைய கொள்கைகளை பரப்புவதற்காக தனது வாழ்நாளில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக பிரசாரக்குகளாக பணிபுரிய இளைஞர்களை தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாரக் என்றால் திருமணம் புரியாமல் வேறு எந்த பணிகளுக்கும் செல்லாமல் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியர்களாக பணிபுரிய வேண்டும். இதற்கு பல இளைஞர்கள் விரும்பாததால் ஆர்.எஸ்.எஸ் தற்போது தன்னுடைய செயல் முறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இனி பிரச்சாரக்குகள் தன்னுடைய வாழ்நாளில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் அந்த அமைப்பிற்காக முழு நேர ஊழியர்களாக பணி புரிந்தால் போதுமானது என்றும் பிறகு அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்றும் முடிவெடுத்துள்ளது. தற்போது ஆர் எஸ் எஸ் அமைப்பில் பிரசாரக்குகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பணிகளை தொடர சமூக சேவை அமைப்புகள் என்ற முகமூடியில் நடத்தும் கிளைகளின் மூலம் பிரசாரக்குகளை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக