புதன், அக்டோபர் 19, 2011

ஃபலஸ்தீன் கைதிகளுக்கு விடுதலை – மகிழ்ச்சியில் காஸ்ஸாவும், மேற்குகரையும்!!!

காஸ்ஸா/டெல்அவீவ்:ஐந்து வருடங்களுக்கு மேலாக ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த கிலாத் ஷாலிதிற்கு பதிலாக 477 ஃபலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் விடுதலைச் செய்துள்ளது.

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி மீதமுள்ள 550 ஃபலஸ்தீன் கைதிகளை இஸ்ரேல் அடுத்தமாதம் விடுதலைச் செய்யும். சிறைக் கைதிகளை விடுதலைச் செய்ய ஹமாஸி்ற்கும், இஸ்ரேலுக்குமிடையே எகிப்து மத்தியஸ்தம் வகிக்க உருவான ஒப்பந்தத்தின்படி 25 வயதான ஷாலிதை ரஃபா எல்லையில் ஹமாஸ் கொண்டு சேர்த்தது.
ஹமாஸ் போலீஸ் தலைவருடன் எல்லைக்கு வந்த ஷாலிதை இஸ்ரேல் அதிகாரிகளிடம் எகிப்து பிரதிநிதிகள் ஒப்படைத்தனர். இங்கேயிருந்து டெல்நோஃப் விமானநிலையத்திற்கு சென்ற ஷாலித் தனது குடும்பத்தினரை சந்தித்தார். இஸ்ரேல் பிரதமர் உள்பட இஸ்ரேலிய பிரமுகர்கள் ஷாலிதை வரவேற்றனர். ஷாலிதின் விடுதலையை கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர் இஸ்ரேலியர்கள். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஷாலிதை வடக்கு இஸ்ரேலில் பிறந்த ஊரான மிஸ்பெ ஹிலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவார்.
எகிப்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது விடுதலையும் தொடர்ந்து நடந்த ஃபலஸ்தீன் கைதிகளின் பரிமாற்றமும் ஃபலஸ்தீனுக்கும், இஸ்ரேலுக்குமிடையே சமாதான முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்ப்பதாக ஷாலித் தெரிவித்தார். மேலும் சில வருடங்கள் சிறையில் இருக்க வேண்டிவரும் என எதிர்பார்த்ததாகவும் ஃபலஸ்தீன் கைதிகளின் விடுதலை சாத்தியமானதில் மகிழ்ச்சியடைவதாகவும் ஷாலித் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 27 பெண்கள் உள்ளிட்ட ஃபலஸ்தீன் கைதிகள் கெரெம் ஷாலோம் எல்லை வழியாக எகிப்திற்கு அழைத்துவரப்பட்ட பிறகு காஸ்ஸாவிற்கும், மேற்குகரைக்கும் சென்றனர்.
சிறையிலிருந்து விடுதலையான ஃபலஸ்தீனர்களை வரவேற்க இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் காஸ்ஸாவில் திரண்டிருந்தனர்.
ஹமாஸ் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா உள்ளிட்டவர்கள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தலைமையேற்றனர்.
2006 ஜூன் மாதம் இஸ்ரேல் நடத்திய காஸ்ஸா தாக்குதலுக்கு சற்று முன்பு ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவ வீரன் கிலாத் ஷாலிதை பிணைக் கைதியாக பிடித்தனர். ராணுவ வீரனை விடுதலைச்செய்ய இஸ்ரேல் பலதடவை பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகும் எதுவும் வெற்றிப் பெறவில்லை. ஆனால், கடந்த 15 மாதங்களாக போராட்ட பந்தலுக்கு வசிப்பிடத்தை மாற்றி ஷாலிதின் பெற்றோர்கள் நடத்திவந்த போராட்டம் தேசிய உணர்வாக மாறியது. இதனைத் தொடர்ந்து என்ன விலைக் கொடுத்தும் ஷாலிதை விடுதலைச் செய்வதற்கு நெதன்யாகுவின் அரசுக்கு நிர்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக சிலர் உச்சநீதிமன்றத்தை நாடியபொழுதும் அரசியல் தீர்மானத்தில் தலையிட நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து சிறைக் கைதிகளின் பரிமாற்றம் சாத்தியமானது.
ஒரு இஸ்ரேல் ராணுவ வீரனுக்கு பதிலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் கைதிகளின் விடுதலை சாத்தியமானது ஹமாஸிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
சிறையிலிருந்து விடுதலையான உற்றாரை வரவேற்க காத்து நின்ற காஸ்ஸாவும், மேற்குகரையும் மகிழ்ச்சியில் திளைத்தன. எங்கும் கொடி தோரணங்களும், முழக்கங்களுமாக காணப்பட்டன.
மேற்கு கரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் விடுதலைச் செய்யப்பட்ட ஃபலஸ்தீனர்களை சுதந்திரப் போராட்ட போராளிகள் என சிறப்பித்துக் கூறினார். மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக காஸ்ஸாவில் 3 நாட்கள் விடுமுறையை ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஷாலிதை பிடிப்பதற்கான முயற்சியில் இரத்த சாட்சியான ஹாமித்  ரன்தீஸி, முஹம்மது ஃபர்கானா ஆகிய போராளிகளுக்கு சிறைக் கைதிகளை மீட்கும் ஒப்பந்தத்தை சமர்ப்பிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக