சனி, ஜனவரி 12, 2013

2014 தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிட தடை ! - தேர்தல் கமிஷனர் சம்பத் நம்பிக்கை !!

வர இருக்கும் பொது தேர்தலுக்கு முன்பாகவே கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போ்ட்டியிட முடியாதபடி தடை விதிக்க நடவடிக்கை எடுக்கதான் விரும்புகிறோம். ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. எப்படியும் 2014-ல் தேர்தல் நடப்பதற்கு முன்பா‌கவே அச்சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தப்படும்”’ என தலைமை தேர்தல் கமிஷனர் சம்பத் கூறினார். தற்போது மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் பார்லிமென்ட் எம்.பி.க்கள் சிலர் மீது கொலை ,ஆட்கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதாக புகார் வந்துள்ளன. இவர்களில் சிலர் மீது வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இனி வருங்காலத்தில் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என ‌கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகலாயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் அறிவித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “’சட்டசபை மற்றும் பார்லிமென்ட் தேர்தல்களில் கிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடைவிதிப்பது குறித்தும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியில் இருந்தே தலைமை தேர்தல் கமிஷன் மத்திய அரசிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன்படி கிரிமினல் குற்றவாளிகள் கோர்ட் மூலம் 5 ஆண்டுகளுக்குமேல் சிறை தண்டனை பெற்றிருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் காலத்திற்கேற்ப அரசுகள் மாறி வருவதால் அந்த கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு வந்தது.
தற்போது இந்த கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருவதால் , கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் , மாநில சட்டசபை,பார்லிமென்ட் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட தடைவிதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை வரப்போகும் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.எனவே அடுத்த பார்லிமென்ட் பொதுத்தேர்தலில் கற்பழிப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் நி்ச்சயம் போட்டியிட முடியாது என்று நம்புகிறேன்.”’என்று அவர் பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக