ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம், டெல்லி பெண்களிடையே பெரும் பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. இதன் விளைவாக, துப்பாக்கி வைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை டெல்லியில் பெருகி வருகின்றது. வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமின்றி, தொலை தூரம் பயணித்து கல்லூரிக்கு செல்லும் இளம்பெண்களும் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதில், தற்போது பெரும் ஆர்வம் காட்டி வருவது தெரிய
வந்துள்ளது. துப்பாக்கி லைசென்ஸ் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? என கேட்டு கடந்த 2 வாரங்களாக டெல்லி போலீசாருக்கு இதுவரை 1200 பெண்கள் தொலைபேசியின் வாயிலாக தகவல் கேட்டுள்ளனர்.
சிலர் டெல்லி கமிஷனர் அலுவலகத்திற்கே சென்று, துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி? என்று விசாரித்துள்ளனர். ஒருவரின் உயிருக்கு, நிச்சயமான முறையில் அச்சுறுத்தல் உள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டால், துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படும் என கூறி போலீசார் பெண்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.
ஆனால், போலீசாரின் பதிலில் திருப்தியடையாத பல பெண்கள், ‘பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களிலேயே எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இதற்காக லைசென்ஸ் வழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் போலீசார், எங்கள் வீட்டு பெண்கள் டெல்லியில் பாதுகாப்பாக நடமாட முடியும் என்ற உத்திரவாதத்தை எழுத்துமூலமாக தருவார்களா?’ என்று கேள்வி எழுப்புகின்றனர்.
2010-ம் ஆண்டு துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கை 320 மட்டுமே. ஆனால், 2011-ல் 800 பெண்கள் லைசென்சுக்காக விண்ணப்பித்துள்ளனர். சில பெண்கள், தங்களது தந்தை அல்லது கணவருக்கு சொந்தமான கைத்துப்பாக்கிகளை தாங்கள் உபயோகிக்க அனுமதியளிக்க வேண்டும் என போலீசாரிடம் அனுமதி கோரியுள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று வரை புதிதாக 274 பெண்கள் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளதை வைத்துப் பார்க்கும்போது, டெல்லி பெண்களின் நிலை, பாதுகாப்பற்றதாகவே உள்ளது என அங்குள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக