சனி, மார்ச் 26, 2011

சொல்ல மறந்த கதை!!!

ராமநாதபுரம்: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அக்கட்சி கொண்டு வந்த சேது சமுத்திரம் திட்டத்திற்கு முக்கியத்துவம் தராமல் போனது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.

இந்திய கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு (தி.மு.க.,) இருந்த போது 2430 கோடி ரூபாய் மதிப்பில் சேதுசமுத்திரம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கான துவக்க விழா 2005 ஜூலை 2ல் மதுரையில் நடந்தது. பிரதமர் மன்மோகன், காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


முதற்கட்டமாக தொடங்கிய கடல் அகலப்படுத்தும் பணியில் "ராமர் பாலம் சர்ச்சை' எழுந்தது. இதைத்தொடர்ந்து திட்டம் வழக்காக சுப்ரீம் கோர்ட்டு வசம் சென்றது. "யார் மனதையும் புண்படுத்தாத வகையில் மாற்றுப்பாதையில் திட்டத்தை அமல்படுத்தும் முறையை கண்டறிய,' கோர்ட் வலியுறுத்தியது.

இதற்காக பச்சோரி என்பவர் தலைமையில் மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்து, மாற்றுப்பாதை ஆய்வு பணியை துவங்கியது. அதுநாள் வரை திட்டத்திற்காக 600 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தனர். தேக்கத்தில் இருந்த ஆய்வுப்பணி குறித்து கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தது.

"2011ன் தொடக்கத்தில் மாற்றுப்பாதை அறிக்கையை சமர்ப்பிக்க,' உத்தரவிட்டது. அதன் பின், மன்னார் வளைகுடா பகுதியில் மாற்றுப்பாதை ஆய்வுப்பணிகள் நடந்தன. திடீரென சில வாரங்களுக்கு முன், " ஆய்வுப்பணிகள் நிறைவுப்பெற்றதாக,' கூறி, அதற்கான கருவிகளை கரை சேர்த்தனர். இன்று வரை ஆய்வின் முடிவுகள் குறித்த அம்சங்களை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், 2011ம் ஆண்டிற்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சேதுசமுத்திரம் திட்டம் குறித்த அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தி.மு.க., அறிமுகப்படுத்தி பாதியில் நிற்கும், சேதுசமுத்திர திட்டம் குறித்த அம்சங்கள் விடுபட்டது தென்மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

"புல்லட்' ரயிலுக்கு கொடுத்த முக்கியத்துவம் சேது சமுத்திரம் திட்டத்திற்கு தராமல் போனது கவலையளிப்பதாக உள்ளது. இதனால், இனி இத்திட்டம் செயலுக்கு வருமா என்ற சந்தேகமும், இதுவரை இத்திட்டத்திற்கு செலவான 600 கோடி ரூபாயும் வீணானதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
sinthikkavum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக