புதன், நவம்பர் 23, 2011

ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பதிலடி : பஸ், பால் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணமா?

சென்னை : மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு போதிய நிதி வராததால்தான் பால், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சொன்ன குற்றச்சாட்டை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி மறுத்துள்ளார். சென்னை வந்திருந்த அவர் நேற்று அளித்த பேட்டி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளே ஸ்தம்பிக்கிற அளவுக்கு பாஜனதா நடந்து கொள்கிறது.
இது ஜனநாயகத்துக்கு எதிரானது. மலிவான அரசியலுக்காக பொறுப்பற்ற முறையில் செயல்படுகின்றனர். ப.சிதம்பரம் மீது விசாரணை நடத்த உத்தரவிட கோரி சுப்பிரமணிய சாமி கடந்த 6 மாதமாக வாரத்துக்கு ஒருமுறை வழக்காடுகிறார். 

அவரிடம் உரிய ஆவணங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் கொடுத்து உத்தரவு வாங்க வேண்டியது தானே?  தமிழகத்துக்கு கேட்ட நிதி தராததால்தான் பால், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களை விட ஆளாத மாநிலங்களில்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கி அதிக கவனம் செலுத்துகிறது. ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கூட காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்தான் முதன் முதலாக தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட உதாரணம் கூறி, தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சமாக மத்திய அரசு செயல்பட்டிருந்தால் அதற்காக போராடக் கூடிய ஆளாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இருந்திருப்பார்.

தமிழக மீனவர்கள் பிரச்னை மனித உரிமை சம்பந்தப்பட்டது. கடல் எல்லை தாண்டுவது என்பதை விட மீனவர்கள் உயிரை மேலானதாக நினைக்கிறோம். இதுபற்றி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். முல்லை பெரியாறு பிரச்னையில் அகில இந்திய அளவில் முடிவு காண வேண்டும். மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்னையை தீர்க்க ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். லோக்பால் மசோதா அறிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ்  திமுக உறவு மத்தியில் மிக வலுவாக உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையை தனிப்பட்ட ஆதாயத்துக்காக சிலர் அரசியல் ஆக்கியுள்ளனர். போராட்டங்கள் நடத்த வெளிநாட்டு பணம் வருவதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். போராட்டங்கள் தொடருவதை பார்த்தால் அவரது குற்றச்சாட்டு நியாயம்தானோ என தோன்றுகிறது. இவ்வாறு அபிஷேக்  சிங்வி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக