2014-ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், டிமிட்ரி ஆன்ட்ரீகின் (ரஷியா), விளாடிமிர் கிராம்னிக் (ரஷியா), செர்ஜி கர்ஜகின் (ரஷியா), பீட்டர் ஸ்விட்லர் (ரஷியா), ஷக்ரியர் நேம்ட்யாரோவ் (அஜர்பைஜான்), வெஸ்லின் தபலோவ் (பல்கேரியா), லெவோன் ஆரோனியன் (அர்மேனியா) ஆகிய 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும். முதலிடத்தை பிடிக்கும் வீரர் வெற்றி பெறுவதுடன், கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பையும் பெறுவார்.
5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அனுபவம் வாய்ந்தவரான தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த், முதல் சுற்றில், போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் லெவோன் ஆரோனியனை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆனந்த் ஆடினார். ராஜாவுக்கு முன்பு இருந்த சிப்பாயை 2 கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கிய ஆனந்த் சாதுர்யமாக விளையாடி 47-வது நகர்த்தலில் எதிராளியின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்தார். மற்ற மூன்று ஆட்டங்களும் டிராவில் முடிந்தன.
முதல் சுற்று முடிவில் ஆனந்த் ஒரு புள்ளியுடன் முன்னிலை வகிக்கிறார். இன்று நடக்கும் 2-வது சுற்றில் ஆனந்த், பல்கேரிய வீரர் வெஸ்லின் தபலோவை எதிர்கொள்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக