புதன், நவம்பர் 28, 2012

கூடங்குளம் அணு கழிவுகளை யார் தலையில் கொட்டுவது !!!



 கூடங்குளம் அணு உலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள் அணு உலையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினர். 
மேலும், அணுக் கழிவுகள் எவ்வாறு அகற்றப்படும்? என்பதை விளக்குமாறும் உத்தரவிட்டனர். இதற்குப் பதில் அளித்த இந்திய அணு சக்தி கார்ப்பரேஷன் கர்நாடகா மாநில கோலார் தங்க வயலில் ஒரு
சுரங்கத்தில் கொட்ட ஒரு யூனிட் அமைக்கபட உள்ளதாக தெரிவித்தது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் பரபரப்பாக வெளிவந்தது. உடனே இதை எதிர்த்து கோலார் பகுதி கர்நாடக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். உடனே மத்திய அரசு அவசர அவசரமாக "கூடங்குளம்அணுக் கழிவுகளை கோலார் தங்க சுரங்கத்தில் கொட்டும் எண்ணம் இல்லை" என்று உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் பல்லாண்டு காலமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்காத மத்திய, மாநில அரசுகள் அம்மக்கள் மீது ஆராஜகத்தை, அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு வந்தன. ஆனால் கர்நாடக மக்கள் போராட்டம் நடத்தியதும் உடனே அதற்க்கு அடிபணிந்தனர்.
தமிழர்களின் நலன்கள் பற்றி இவர்களுக்கு அக்கறையே, பொறுப்போ கிடையாது. காவிரி நதியை திறந்துவிட வேண்டி டெல்ட்டா பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களின் போராட்டத்திற்கு இதுவரை எந்த மரியாதையும் கொடுக்கப்பட்டதில்லை. கூடங்குளத்தில் அணு உலை வேண்டும் என்று வாதிடும் தேசபக்தி அடிமைகள் கர்நாடகாவில் அணு கழிவுகளை கொட்ட தெரிவிக்கப்படும் எதிர்ப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்த சம்மதிப்பார்களா?


தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையை உடனே திறக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றனர். இதே கூட்டம்கர்நாடகாவில் கோலாரில் அணுக்கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்படியானால் இந்த அணு கழிவுகளை எங்கேதான் கொட்டுவது? அணு உலைகளை ஆதரிப்பவர்கள் தலையிலோ, வீடுகளிலோ கொட்ட வேண்டியதுதான். தமிழகத்தின் மின்சாரம் மட்டும் வேண்டுமாம் ஆனால் அணு கழிவுகளை கொட்ட கூடாதாம். என்ன ஒரு நீதி. தமிழன் என்றால் நீதியும் தடுமாறும் போலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக