வெள்ளி, நவம்பர் 30, 2012

நீயா ? நானா ?... நடு வானில் வாய்ச்சண்டையில் குதித்த 2 ஸ்பைஸ்ஜெட் விமானிகள் !!!

மும்பை: விமான பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் பைலட்டுகள், நடுவானில் வாய்ச்சண்டை போட்ட சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் முதலில் தரையிறங்குவது என்பது தொடர்பாக இந்த மோதல் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சண்டை
நடந்துள்ளது. டெல்லியிலிருந்து இந்தூர் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்க மும்பை விமானக்கட்டுப்பாட்டு அறை அனுமதி கொடுத்தது. இந்த நிலையில் அதே நேரத்தில், ஹைதராபாத்-இந்தூர் இடையிலான ஸ்பைஸ்ஜெட் விமானமும் தரையிறங்க அனுமதி கோரியது.

ஆனால் டெல்லி விமானம் இறங்கிய பின்னர் நீங்கள் தரையிறங்குங்கள் என்று ஹைதராபாத் விமானத்திற்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் போனது.
ஆனால் அதை ஹைதராபாத் விமானி ஏற்கவில்லை. அவர் டெல்லி-இந்தூர் ஸ்பைஸ்ஜெட் விமானியை தொடர்பு கொண்டு நான்தான் முதலில் தரையிறக்குவேன் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதை தரைக்கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்த டெல்லி விமானி, என்னுடன் ஹைதராபாத் விமானி வாய்ச்சண்டையில் ஈடுபட்டுள்ளார் என்று புகார் கூறினார். இப்படி இருவரும் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்த சமயத்தில், இரு விமானங்களும் கிட்டத்தட்ட 3100 அடி நெருக்கத்தில் வந்து விட்டன. அது பாதுகாப்பு ரீதியாக போதுமான தூரம்தான் என்றாலும் ரிஸ்க்கான விஷயமும் கூட என்பதால் பீதி ஏற்பட்டது.
சம்பவம் நடந்தபோது இரு விமானங்களிலும் மொத்தமாக 160 பயணிகள் இருந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக