திங்கள், மார்ச் 09, 2015

தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூடியது பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் பிப்ரவரி 17–ந் தேதி தொடங்கியது. அன்று கவர்னர் கே.ரோசய்யா உரை நிகழ்த்தினார். அந்த சட்டசபை கூட்டத்தொடர் முடிவு பெறவில்லை.
தேதி குறிப்பிடப்படாமல் அவைதள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, பிப்ரவரி 6–ந் தேதி முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு, கவர்னர் உரை பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் 2015–2016–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இம்மாதம் இறுதியில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்படும். பின்னர் ஒவ்வொரு துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.

இந்த சூழ்நிலையில், தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று மாலை 3 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடந்தது. தொடர்ந்து 40 நிமிடம் நடந்த கூட்டத்தில், நடப்பாண்டு பட்ஜெட் பற்றி ஆலோசனை நடந்ததாக தெரிகிறது.

ஒவ்வொரு துறைகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது, எந்த துறைக்கு அதிக முன்னுரிமை அளிப்பது, தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அரசியல் ரீதியான விவகாரங்கள் ஆகியவை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தூர்பாண்டியன் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக