சனி, பிப்ரவரி 23, 2013

இரயில்வே துறையில் தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் ரயில் மறியல் போராட்டம் !! (படங்கள் இணைப்பு)

தமிழகத்தை தொடர்ந்து பறக்கணிக்கும் இரயில்வே துறையை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் தமிழகத்தில் தேவையான புதிய இரயில்களையும், திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டையும் அறிவிக்கக் கோரியும். இராயபுரம் இரயில் நிலையத்தை 4வது முனையமாக விரைந்து செயல்படுத்தக் கோரியும் இன்று (22.02.2013) எஸ்.டி.பி.ஐ கட்சி சென்ட்ரல் இரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தியது.இந்த போராட்டத்தில் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், ரெத்தினம் அண்ணாச்சி, வட சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்சா, தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது உசேன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால், திருவள்ளூர் மாவட்ட தலைவர் புகாரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தனது தலைமையுரையில் , " மத்திய அரசும், இரயில்வே துறையும் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு குறைவான இரயில்களே இயக்கப்படுகின்றன. தமிழகத்திற்கு கடந்த பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் கிடப்பில் உள்ளன அல்லது ஆமைவேகத்தில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் ஓடும் இரயில்களில் 75% இரயில் பெட்டிகள் தரமானதாக இல்லை. வட மாநிலங்களில் ஓடி தேய்ந்ததை தமிழகத்திற்கு அனுப்புகிறார்களோ தெரியவில்லை.

இராயபுரம் இரயில் நிலையத்தை 4வது முனையமாக மாற்றும் அறிவிப்பு வந்தும் விரைந்து அதற்கான வேலைகள் நடக்கவில்லை. தமிழகத்தின் அனைத்து கட்சியின் எம்.பிக்களும் பிற மாநில எம்.பிக்களைப் போல் தமிழக திட்டங்களுக்கு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வலியுறுத்த வேண்டும்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டை பாதை இன்னும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும். நூற்றுக்கணக்கான ஆளில்லா லெவல் கிராசிங்கில் பல்வேறு உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. இவற்றை மாற்ற வேண்டும்.

நெல்லை மேலப்பாளையம் முதல் குமரி களியக்காவிளை வரை திருவனந்தபுரம் இரயில்வே கோட்டத்தில் உள்ளதால் அந்த பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. எனவே நெல்லையை தலைமையிடமாக கொண்டு அப்பகுதிகளையும் இணைத்து புதிய இரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும் " என்றார்.

இதில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் இரயில்வே துறையை கண்டித்தும், வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இரயில்வே நிலையத்தினுள் நுழைந்து இரயிலை மறிக்க முயன்ற மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி உட்பட 500 க்கும் மேற்ப்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.                                                                  1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக