திங்கள், டிசம்பர் 15, 2014

ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் சின்சோ அபே கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

ஜப்பான் பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்ட திடீர் தேர்தலில் தற்போதைய பிரதமர் சின்சோ அபே கட்சி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

திடீர் தேர்தல்
ஜப்பான் பிரதமராக கடந்த 2012–ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சின்சோ அபே. இவருடைய பதவி காலம் முடிவடைவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனினும் அண்மையில் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவற்காக இவர் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து பாராளுமன்றத்தை கலைத்து விட்டு இடைத்தேர்தலை சந்திப்பதென கடந்த மாதம் சின்சோ அபே முடிவு செய்தார். அதன்படி 475 உறுப்பினர்களைக் கொண்ட ஜப்பான் பாராளுமன்ற கீழ் சபைக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.

மந்தமான வாக்குப்பதிவு

இதில் சின்சோ அபே தலைமையிலான விடுதலை ஜனநாயக கட்சி கூட்டணியும், பிரதான எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயக கட்சி கூட்டணியும் அதிகாரத்தை கைப்பற்ற போட்டியிட்டன.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 4.30 மணிக்கு முடிந்தது. நாட்டின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தபோதிலும் சில இடங்களில் ஓட்டுப்பதிவு மந்தமாகவும் நடைபெற்றது.

300 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்

எனினும் தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின்படி சின்சோ அபேவின் விடுதலை ஜனநாயக கட்சி கூட்டணிக்கு 300–க்கும் அதிகமான தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
பொதுவாக ஜப்பானில் இதுவரை எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளின்படியே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன என்பதால் அபேயின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக