திங்கள், அக்டோபர் 21, 2013

குர்பானி இறைச்சி: 12 மாநிலங்களில், 550 கிராமங்களில், 3,30,000 ஏழைகளுக்கு வினியோகம் – ரிஹாப் சாதனை!

நலிந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ரிஹாப் இந்தியா பௌண்டேஷன் இந்த ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி 3,30,000 ஏழைகளுக்கு குர்பானி இறைச்சி உணவு கிட் வழங்கி சாதனை படைத்துள்ளது. மொத்தம் 12 மாநிலங்களில், 550 கிராமங்களில் ஏழைகளுக்கு குர்பானி உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.


நலிந்த சமூக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ரிஹாப் இந்தியா பௌண்டேஷன் கடின முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்காக அது பல வகைகளில் உழைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு தங்கள் குர்பானி இறைச்சியைக் கொடுக்க விரும்புவோரிடமிருந்து ரிஹாப் வாங்கி 12 மாநிலங்களில் விநியோகித்துள்ளது.

மொத்தம் 85,000 கிலோ இறைச்சி ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. 

அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மணிப்பூர், பீகார், ஜார்கண்டு, டெல்லி, உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், தமிழ் நாடு, இராஜஸ்தான் ஆகிய 12 மாநிலங்களில் 60,000 ஏழைக் குடும்பங்கள் இதனால் பலன் பெற்றன.

சமீபத்தில் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசப்பர்நகர் மாவட்டத்திலுள்ள ஜோலா, லே, மோன்சொரக்ஸ், கரானா ஆகிய இடங்களில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களுக்கு ரிஹாப் குழு சென்றது.

அங்கே அடைக்கலம் புகுந்துள்ள 2100 பேருக்கு குர்பானி கிட்டுகளை ரிஹாப் வழங்கியது. புண்பட்டுக் கிடக்கும் அவர்களுக்கு இது பெரிதும் ஆறுதலைத் தந்தது.



ரிஹாப் தன்னார்வத் தொண்டர்கள் இந்த முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி சமாதானப்படுத்தினர்.

“கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும்  பெருநாள் தினங்களில் கூட நல்ல உணவு கிடைக்காமல் தவிப்பவர்களுடன் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். எங்கள் ஆதரவாளர்கள், நன்கொடையாளர்களின் பேருதவியால் இதனை நாங்கள் செய்ய முடிந்தது. இந்தத் தடவை 60,000 குடும்பங்களுக்கு 550 கிராமங்களில் நாங்கள் குர்பானி உணவை விநியோகித்தோம். மொத்தமாக 3,30,000 ஏழைகள் இதன் மூலம் பயனடைந்தனர்” என்று ரிஹாபின் பொதுச் செயலாளர் அப்சல் சந்த்ரகண்டி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக