சென்னை: தமிழக அமைச்சரவையில் ஆறு அமைச்சர்களது இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. மறைந்த மரியம் பிச்சைக்கு பதிலாக, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, ராணிப்பேட்டை எம்.எல்.ஏ., முகமது ஜான் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புதிய அமைச்சரவை கடந்த மே 16ம் தேதி பதவியேற்றது. முதல்வர் ஜெயலலிதா உட்பட, 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். அமைச்சர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தன. துறை வாரியாக ஆய்வுக் கூட்டங்களையும் முதல்வர் நடத்த உள்ளார். இதுதவிர, பட்ஜெட் தயாரிப்பு பணியும் துவங்கியுள்ளது.இந்நிலையில், அமைச்சராக பதவியேற்ற ஒரு வாரத்தில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை, சாலை விபத்தில் மரணமடைந்தார். இவர், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே, அமைச்சரவையில் மற்றொரு இஸ்லாமியருக்கு இடம் கிடைக்கும் என பேசப்பட்டது. இதன்படியே, புதிய அமைச்சராக, ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., முகமது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி, முகமது ஜானை அமைச்சராக நியமித்து, கவர்னர் பர்னாலா நேற்று உத்தரவிட்டார். இவரது பதவியேற்பு நிகழ்ச்சி, வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு ராஜ்பவனில் நடக்க உள்ளது.


















