புதன், மே 27, 2015

காவல் மற்றும் தீயணைப்பு துறைக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள்; ஜெ., திறந்து வைத்தார்

காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு ரூ.444 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.  இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் தரை மற்றும் 3 தளங்களுடன் 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 226 காவல் துறை குடியிருப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் திறந்துவைத்தார். 

மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 27 மாவட்டங்களில் 321 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3918 காவல்துறை குடியிருப்புகள்; சென்னை, எழும்பூரில் 31,335 சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் தரை மற்றும் 4 தளங்களுடன் 8 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும அலுவலகம்; சென்னை மாநகரில் உள்ள மதுரவாயல் மற்றும் மடிப்பாக்கம், மதுரை மாநகரில் உள்ள விளக்குத் தூண், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் 26 மாவட்டங்களில் 31 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடலோர காவல் நிலையங்கள் உள்ளிட்ட 68 காவல் நிலையங்கள்; 

சென்னை மருதம் வளாகத்தில் அமைந்துள்ள தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (பாதுகாப்பு பிரிவு) கூடுதல் தளம், சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதான வளாகத்தில் பயிற்சி மையம் மற்றும் தங்குமிடங்கள், திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஆயுதப்படைக்கு நிர்வாக அலுவலகங்கள்; புழல், மதுரை, ராமநாதபுரம் மாவட்டம்-கமுதி ஆகிய இடங்களில் காவல் ஆளுநர்களுக்கான தங்குமிடங்கள்; 

அரியலூர், கோயம்புத்தூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் காவல் பல்பொருள் அங்காடி கட்டிடங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் 50 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை கட்டிடங்கள்; 

காஞ்சீபுரம் மாவட்டம்-திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம், திருப்பூர் மாவட்டம் - பல்லடம் உட்பட பல இடங்களில் 11 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 130 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகள்; தஞ்சாவூரில் 8,344 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஒரு தளத்துடன் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகக் கட்டிடம்; என மொத்தம் 444 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். 

மாம்பலம் மற்றும் திருவான்மியூர் ரெயில் நிலையங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 ரெயில்வே காவல் நிலையங்கள்; காஞ்சீபுரம் மாவட்டம்-செய்யூர், ஈரோடு மாவட்டம்-சென்னிமலை, திருப்பூர் மாவட்டம்-அவினாசி, கோயம்புத்தூர் மாவட்டம்-அன்னூர், நாகப்பட்டினம் மாவட்டம்-திருமருகல், புதுக்கோட்டை மாவட்டம்-கீரமங்கலம், மதுரை மாவட்டம்-அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்; கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் செயல்படும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம்; ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். 

சென்னை மாநகர காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக 52 பொலீரோ ஜீப்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு அனைத்து இடங்களிலும் இலகுவாக செல்லும் 12 வாகனங்கள் என மொத்தம் 5 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 64 வாகனங்களை வழங்கும் அடையாளமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 5 காவல்துறை ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, போலீஸ் டி.ஜி.பி. அசோக் குமார், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர், காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆர்.சி.குடாவ்லா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக