புதன், ஏப்ரல் 15, 2015

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நீட்டிக்கப்படுமா? சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி விசாரணை

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிப்பது குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி நடைபெறுகிறது.
பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து, அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர். தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் கடந்த அக்டோபர் 17-ந் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அத்துடன் விசாரணையை டிசம்பர் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவின் மீது டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்ற விசாரணையில் அவர்களுக்கு கடந்த அக்டோபர் 17-ந் தேதி வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் நான்கு மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் 18-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

மேலும், ‘ஜெயலலிதா உள்ளிட்டோர் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்சை ஏற்படுத்த வேண்டும். இந்த பெஞ்ச் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஜெயலலிதா தரப்பு தங்களுடைய வாதங்களை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க ஒரு மாத கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். ஏதேனும் காரணங்களால் ஒரு மாதத்துக்குள் உத்தரவு வழங்க முடியவில்லை என்றால் மேலும் 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்’ என்று அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. இந்த விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளார்.

17-ந் தேதி விசாரணை

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ஏப்ரல் 18-ந் தேதியோடு முடிவடைகிறது.

இந்நிலையில் வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் நீட்டிப்பு வழங்குவது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெறுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக