ஞாயிறு, ஆகஸ்ட் 02, 2015

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக எந்த தியாகமும் செய்ய தயார்: ஸ்டாலின் பேச்சு

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெருமாள் சந்திப்பு நிகழ்ச்சி (ஈத் மிலன்) சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர்கள் ரத்தினம், உஸ்மான்கான், ஊடக ஒருங்கிணைப்பாளர் ஷேக் முகமது அலி, வர்த்தக அணி தலைவர் முகைதீன், துணை தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

தி.மு.க. சிறுபான்மையினருக்கு தொடர்ந்து பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது. வெற்றி பெற்றாலும், தோற்றாலும், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் என எப்போதும் தி.மு.க.விற்கு துணை நிற்பவர்கள் இஸ்லாமியர்கள். தி.மு.க. மற்றும் இஸ்லாமியர்கள் இடையேயான நட்புறவை யாராலும் பிரித்து விட முடியாது.

கருணாநிதி தன் ஆட்சி காலத்தில் இடஒதுக்கீடு உள்பட எண்ணற்ற நலத் திட்டங்களை சிறுபான்மையினருக்கு நிறைவேற்றி கொடுத்திருக்கிறார். தேர்தல் நெருங்குகிற நேரத்தில் கூட்டணி அமைக்க இந்த கூட்டம் நடத்தப்படுகிறதா? என்று கவிக்கோ அப்துல் ரகுமான் கேட்டார்.
அதில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்தகூட்டம் அதற்காகத்தான் நடத்தப்படுகிறது. நானும் அந்த முடிவோடு தான் வந்திருக்கிறேன். தமிழகத்தில் நடைபெறும் அக்கிரம ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த தியாகத்தை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சமூக நீதி இயக்கத்தை சேர்ந்த பேராயர் ராஜாசிங், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிக்கோ இருதய ராஜ், கவிக்கோ அப்துல் ரகுமான், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகமது ஹனிபா உள்பட ஏராளமானோர் பேசினர்.
முடிவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் எஸ்.அமீர் ஹம்சா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக