செவ்வாய், நவம்பர் 15, 2011

ரயில் டிக்கெட் விலை விரைவில் உயரும்: ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தகவல்!!!

சென்னை:""கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட நிலையிலும், ரயில்வே கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணத்தை சிறிதளவு உயர்த்தினால், ரயில்வே நிர்வாகம், மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய முடியும். இருப்பினும், பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே, கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்கப்படும்,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.

சென்னை, பெரம்பூரில் நடந்த ரயில்வே தொழிலாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, சென்னை வந்தார். விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:ரயில்வே பயணிகள் கட்டணத்தை உயர்த்தி, எட்டு ஆண்டுகள் ஆகின்றன. குறிப்பாக, இரண்டாம் வகுப்பு பயணிகள் கட்டணத்தை உயர்த்தி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணம் பலமுறை, பல மடங்கு அதிகரித்து விட்டது. ரயில் பெட்டிகள் பராமரிப்பு செலவும் பல மடங்கு கூடியுள்ளது. ரயில்வே தொழிலாளர்கள் சம்பள உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில்வே பயணிகள் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

சிறிதளவு கட்டண உயர்வு அதிகரித்தால், ரயில்வே துறையை மேலும் மேம்படுத்த முடியும். பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும். எனவே, ரயில்வே பயணிகள் கட்டணத்தை உயர்த்தலாமா என்பது குறித்து, தற்போது ஆலோசனை நடந்து வருகிறது.இந்த விஷயத்தில், அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே முடிவெடுக்கப்படும். ரயில்வேயில் உள்ள காலியான பணியிடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள், தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், 45 ஆயிரம் பணியிடங்களுக்கு, ரயில்வே தேர்வு ஆணையம் ஆட்களைத் தேர்வு செய்துள்ளது. காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு கட்டமாக, விரைவில் நிரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக