வெள்ளி, நவம்பர் 11, 2011

ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை: சங்க்பரிவார் பயங்கரவாதத்தின் நேரடி சாட்சி

ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்ட குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் அதிகமாக விவாதிக்கப்படாத சம்பவம்தான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கு.கோத்ரா சம்பவத்தின் திரை மறைவில் மோடி அரசின் ஒத்துழைப்புடன் குஜராத் முழுவதும் சங்க்பரிவார பயங்கரவாதிகள்
வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கோரத்தாண்டவம் ஆடிய வேளையில் தப்பி பிழைத்தவர்கள் ஸர்தார்புராவில் உள்ள இப்ராஹீம் ஷேக்கின் வீட்டில் அடைக்கலம் தேடினர். அபயம் தேடியவர்களை விடாது துரத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இப்ராஹீமின் வீட்டை பூட்டி உள்ளே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர்.
உடலில் தீ பற்றிய பொழுது தப்பிக்க கூட வழிதெரியாமல் தீயில் வெந்து அந்த அப்பாவிகள் மரணித்தார்கள் என இச்சம்பவத்தில் தப்பிப்பிழைத்தவர் வாக்குமூலம் அளித்திருந்தார். கொல்லப்பட்ட33 பேர்களில் 22 பேர் பெண்களாவர். மீதமுள்ளவர்கள் குழந்தைகள். எட்டுமாதமே ஆன பச்சிளம் குழந்தையும் இந்த பாதகர்களின் கொடூரத்திற்கு பலியானது. கொல்லப்பட்டவர்களில் 11 பேர் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களாவர். இதனை அவர்களது உறவினரான அய்யூப் மியா ரஸூல் மியா ஷேக் வாரப்பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கோத்ரா சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே ஸர்தார்புரா கூட்டுப் படுகொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக ஏற்கனவே ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது. ஸர்தார்புரா சம்பவம் நிகழ்வதற்கு முந்தைய தினம் மசாலப்பொடி வாங்க தயாபாய் வனபாய் என்ற நபரின் கடைக்கு சென்ற தனது மாமாவிடம், இது இவருடைய கடைசி பஜ்ஜியை தின்பதற்கான மசாலா என கடை உரிமையாளர் இன்னொரு நபரிடம் கூறியதாக அய்யூப் டெஹல்காவிடம் தெரிவித்திருந்தார். இதனை போலீஸாரிடம் புகார் அளித்தபிறகும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எஸ்.ஐ.டியும் இதனை கண்டுக்கொள்ளவில்லை.
கோத்ரா சம்பவம் நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிரான என்ன செய்தாலும் யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள். நமது அரசு அவர்களை காப்பாற்றும் என நரன் லாலு பட்டேல் என்ற உள்ளூர் எம்.எல்.ஏ கூறியதாக ஸர்தார்புரா கூட்டுப் படுகொலையில் தனது மூன்று குடும்ப உறுப்பினர்களை இழந்த நாஸிர் அக்பர் ஷேக் பின்னர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
கலவரத்திற்கு முன்னோடியாக சங்க்பரிவார தீவிரவாதிகள் முஸ்லிம்கள் நெருக்கமாக வசித்த ஷேக் முஹல்லாவில் ஹாலோஜன் விளக்குகளை நிறுவிய பொழுது, இது எதற்கு? என வினவிய பொழுது “முஸ்லிம்களை கொலைச் செய்ய” என பதிலளித்ததாக பிக்குமியா ஷேக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்த போதிலும் அதனை செவிக்கொடுத்து கேட்க போலீஸ் தயாராகவில்லை.
துவக்கத்தில் இவ்வழக்கை விசாரித்த உள்ளூர் போலீஸ் பிரமுகர்கள் பலரையும் தவிர்த்துவிட்டு முதல் தகவல் அறிக்கையை(எஃப்.ஐ.ஆர்) தயார் செய்தனர் என குற்றச்சாட்டு முன்னரே எழுந்தது. ஸர்தார்புரா கூட்டுப் படுகொலைக்கு தலைமை வகித்த முன்னாள் பா.ஜ.க அமைச்சர் நரன் லாலு பட்டேல் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவராவார். துவக்கத்தில் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் வி.ஹெச்.பியின் குஜராத் மாநில செயலாளரான திலீப் திரிவேதி ஆவார். குற்றவாளிகளின் ஜாமீன் மனுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய இவர் ஜாமீனுக்கு ஆதரவான முடிவை மேற்கொண்டு குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உதவினார். பின்னர் இனப் படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த மனுவில் உச்சநீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து திலீப் திரிவேதி நீக்கப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு அவர்களும் பிரபல ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க தலைவர்களை இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க துணியவில்லை. ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கிலிருந்து தப்பித்த பலரும் குற்றவாளிகளின் பெயர் விபரங்களை அளித்து நீதிமன்றத்தில் அவர்களை சரியாக அடையாளம் காண்பித்த பிறகும் அவர்கள் தப்பிவிட்டனர் என ஸர்தார்புரா கூட்டுப்படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஒய்.பி.ஷேக் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு எதிரான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்ததற்கு காரணம் அரசு தரப்பின் வீழ்ச்சியாக சுட்டிக்காட்டப்படுகிறது. வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதற்கான சாட்சிகளை எஸ்.ஐ.டி சாட்சிகளாக எடுத்துக்கொள்ளவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டுப் படுகொலை நிகழும்போது போலீஸார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு ஆதாரமான மொபைல் ஃபோன் அழைப்புகளையோ, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரியின் வாக்குமூலத்தையோ எஸ்.ஐ.டி ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வலுவான குற்றச்சாட்டும் உள்ளது.
நேற்று ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வேளையில் நீதிமன்றத்தில் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களின் குடும்பத்தினர் யாரும் இல்லை. அந்த கோர சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் அதன் கோர நினைவுகள் ஏற்படுத்தும் பீதியின் காரணமாக மெஹ்ஸானா மாவட்டத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு கூட திரும்ப முடியாமல் உள்ளனர் இந்த அப்பாவி முஸ்லிம்கள். அருகிலுள்ள மாவட்டத்தில் ஸத்நகர் அகதிகள் முகாமில் அவர்கள் வசித்து வருகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக