திங்கள், நவம்பர் 14, 2011

யுனெஸ்கோவின் கோபத்தைத் தூண்டிய இஸ்ரேல் பத்திரிக்கையின் கார்ட்டூன்

ஜெருசலம்:இஸ்ரேலின் பிரதமர் ஈரான் மீது குண்டு வீசி அழித்துவிட்டு வரும் வழியில் ஐ.நாவின் அலுவலகம் மீது குண்டு வீசி அழிக்கவேண்டும் என்று சொல்வது போன்று இஸ்ரேல் பத்திரிக்கை ஒன்று கார்ட்டூன் வெளியிட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் தூதரக அதிகாரியிடம் “நீங்கள் தவறு செய்கிறீர்கள்” என்று கடுமையாக புகார் தெரிவித்துள்ளது யுனெஸ்கோ.

இஸ்ரேல் பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் கார்டூன் அமைதிக்கான தூதர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் உள்ளது என்று யுனெஸ்கோ இஸ்ரேல் தூதர் நிம்ரோத் பர்கானிடம் புகார் அளித்துள்ளது.
இந்த கார்டூன் கடந்த வாரம் ஹார்ட்ஸ் தினசரியில் வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கார்ட்டூனின் சாராம்சம் என்னவெனில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானை விமானிகள் குண்டு போட்டு அழிப்பது போன்றும் திரும்ப வரும் வழியில் யுனெஸ்கோவின் மீது குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று கூறுவது போன்றும் வெளியிடப் பட்டிருந்தது. இந்த கார்ட்டூன் சமீபத்தில் ஃபலஸ்தீனத்திற்கு யுனெஸ்கோவில் உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இது குறித்து இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகல் பல்மோர் கூறியதாவது; கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிக்கையானது சுதந்திரமாக செயல்படும் பத்திரிக்கை என்றும் அதனை அரசு கட்டுப்படுத்த முடியாது என்றும் பர்கான் யுனெஸ்கோவிடம் தெரிவித்ததாக கூறினார்.
ஃபலஸ்தீன் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி யுனெஸ்கோவின் உறுப்பினராக அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா தனது 10  மில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்தி கொள்வதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக