வியாழன், நவம்பர் 10, 2011

அன்னா ஹசாரேவையை இயக்குவதே நாங்கள் தான் : ஆர்.எஸ்.எஸ் தலைவர்


கொல்கத்தா : அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்தே அவர் உண்மையான காந்தியவாதி என்று ஒரு சாராரும் பிஜேபியின் கையாள் என்று இன்னொரு புறமும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நெருப்பில்லாமல் புகையாது என்னும் பழமொழிக்கேற்ப ஆர்.எஸ்.எஸ் – அன்னா ஹசாரே இடையேயான உறவு நீண்ட கால நெருங்கிய உறவு என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களின் மத்தியில் அதிகாரபூர்வமுற்ற முறையில் பேசி கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸின் சர் சங்சலாக் (தலைவர்) மோகன்ராவ் பகவத் ஆர்.எஸ்.எஸுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் இடையேயான உறவு நீண்ட கால நெருங்கிய உறவு என்று கூறியுள்ளார். மேலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்குமாறு அன்னாவை தூண்டியது தாங்கள் தான் என்றும் கூறினார்.

அன்னாவிடமிருந்து அழைப்பு வராததால் தாங்கள் நேரடியாக பங்கேற்கவில்லை என்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்து கொள்வதை தாம் தடுக்கவில்லை என்றும் கூறினார். எங்களுக்கும் அன்னாவுக்கும் இடையேயான உறவு நீண்ட கால உறவு என்று கூறிய மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் தான் அன்னாவின் வளர்ச்சி திட்டங்களை மக்களுக்கு விளம்பரப்படுத்தியது என்றும் அன்னாவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கிராமப்புற திட்டங்களில் பங்கேற்றார் என்றும் இச்சந்திப்புகளின் போது தான் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்க அன்னாவை ஆர்.எஸ்.எஸ் தூண்டியது என்றார்.

அன்னாவிடம் பேசியது போல் பாபா ராம்தேவிடமும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்குமாறு ஆர்.எஸ்.எஸ் தான் வலியுறுத்தியாதாகவும் கூறிய பகவத் இருவரையும் வலுக்கட்டாயப்படுத்தி சேர்க்க முடியாது என்றாலும் ராம்தேவை அன்னாவுடன் சேர்ந்து செயல்பட சொன்னதாகவும் பகவத் சொன்னார். இது போன்ற ஊழலற்ற தனி நபர்களை உருவாக்குவதன் மூலம் தாம் கனவு காணும் இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். இதே கருத்தை தான் திக்விஜய்சிங் சமீப காலமாக சொல்லி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக