வியாழன், நவம்பர் 10, 2011

குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை

sardarbura accused
அஹ்மதாபாத்:குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொலைச் செய்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது விரைவு நீதிமன்றம் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் கொலை, கொலை முயற்சி, கலவரம் நடத்துதல், தீவைப்பு, குற்றகரமான சதித்திட்டம் ஆகிய குற்றங்களுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.சி.ஸ்ரீவஸ்தவா தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகள் மீதான இதர சில வழக்குகளில் மூன்று முதல் 10 வருடம் வரையிலான சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம். மேலும் ஒவ்வொருவரும் ரூ.20 ஆயிரம் வீதம் அபராதம் செலுத்த வேண்டும்.
துவக்கத்தில் உள்ளூர் போலீஸாரால் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, உச்சநீதிமன்றம் நியமித்த ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம்(எஸ்.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டது. குஜராத் இனப்படுகொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த 9 வழக்குகளில் முதல் வழக்கில் தீர்ப்பு ஸர்தார்புரா வழக்கில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த வழக்கில் 76 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் இருவர் விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர் சிறுவர் என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற 73 பேர் மீதான வழக்கு 2009 ஜூலை முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் எரிப்பில் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு முஸ்லிம்கள்தாம் காரணம் என பொய் பிரச்சாரம் சங்க்பரிவார பயங்கரவாதிகளால் வேகமாக பரப்பப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்திய வரலாற்றிலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலை குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் அரங்கேறியது.
இந்த இனப் படுகொலையின் போது நடந்ததுதான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை. ஸர்தார்புராவில் உள்ள வீடுகளை சங்க்பரிவார பாசிச பயங்கரவாதிகள் தீவைத்துக் கொளுத்தி எரித்து சாம்பலாக்கினர். சொத்துக்களை கொள்ளையடித்தனர். அருகிலிலுள்ள ஊரிலிருந்து கலவரத்திற்கு பயந்து ஸர்தார்புராவில் வீடுகளில் அபயம் தேடிய அப்பாவி முஸ்லிம்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அவர்களின் கதறலையும் பொருட்படுத்தாமல் வெறித்தனமாக வீட்டிற்கு தீவைத்து எரித்துக் கொலைச் செய்தனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும், குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும் எனவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். கூட்டுப் படுகொலைக்காக விநியோகித்த ஆயுதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், கொந்தளித்த மக்கள் கூட்டம்தான் கூட்டுப் படுகொலையை நிகழ்த்தியது என விளக்கமளித்த நீதிபதி, தண்டனையை கொலைக் குற்றத்திற்கான மிகவும் குறைந்தபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் எட்டுபேர் மட்டுமே தற்பொழுது சிறையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஜாமீன் கோரி வெளியே உள்ளனர். கூட்டுப் படுகொலைக்கு தலைமை வகித்த பெரும் புள்ளிகள் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்னரே எழுந்தது. 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய விசாரணையில் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட 40 பேர் உள்பட 112 சாட்சிகள் விசாரணைச் செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக